25 ஜூலை 2017

சசிகலா என்றும் நித்தியகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை. ஆனாலும் சிறையின் விதிமுறைகளைச் சசிகலா மீறி இருக்கிறார். இந்தச் சிறைமீறல் குற்றச்சாட்டுக்கள் உறுதிபடுத்தப் பட்டால் மேலும் பல ஆண்டுகள் கூடுதலாகச் சிறைத் தண்டனை கிடைக்கலாம். 
 

சசிகலாவைப் பொருத்த வரையில் கிடைத்தாலும் ஒன்றுதான் கிடைக்காமல் போனாலும் ஒன்றுதான்.

சிறையில் சசிகலாவுக்கு ஒதுக்கப் பட்டவை 5 அறைகள்; அங்கே அவருக்குக் கொடுக்கப்பட்ட இருந்த வி.ஐ.பி. வசதிகள்; நட்சத்திர ஓட்டல் வாழ்க்கை; அடுத்து பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரம் போன்ற அனைத்து விவரங்களும் கசியத் தொடங்கி விட்டன.



பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு உண்மையிலேயே நட்சத்திர ஓட்டல் போல் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன என்று பெங்களூரு சிறைத் துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா சொல்லப் போய் அதுவே கர்நாடக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது. டி.ஐ.ஜி ரூபா சொல்கிறார்... சசிகலாவுக்கு...

தனி சமையல் அறை; 
ஓய்வு எடுக்க தனி அறை; 
படுப்பதற்கு ஓர் அறை; 
ஒரு வெற்று அறை;
சோபா இருக்கை சந்திப்பு அறை;  

இப்படி மொத்தம் அவருக்கு மட்டும் 5 அறைகள். இதற்காக 2 லிருந்து 5 கோடி ரூபாய் வரை பணம் கைமாறி இருக்கிறது.


சசிகலாவை மற்ற கைதிகள் நெருங்கவே முடியாதபடி அவருக்கு என்று தனிப்பட்ட அறை. வேறு யாரும் உள்ளே நுழைய முடியாத அளவிற்குத் தடுப்புப் சுவர் வேறு.

சிறையில் இருக்கும் சசிகலாவை அவரின் உறவினர்கள் அல்லது கட்சிக்காரர்கள் சந்திக்க வேண்டும் என்றால் அந்தச் சந்திப்புக் காட்சிகளை வீடியோ கேமரா கண்காணிப்பில் தான் நடக்க  வேண்டும்.

ஆனால் சசிகலாவுக்கு அப்படி அல்ல. அவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்த பார்வையாளர் அறையில் கேமரா வசதிகள் அகற்றப்பட்டு உள்ளன. 



வீட்டில் இருப்பது போலவே சசிகலா சகல வசதிகளுடன் சிறையில் இருக்கிறார் என்று பெங்களூரு பத்திரிகைகள் டி.ஐ.ஜி. ரூபாவை மேற்கோள் காட்டி பக்கம் பக்கமாக எழுதிக் குவிக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகளைச் சிறைத் துறை டி.ஜி.பி. சத்யநாராயண ராவ் மறுத்துப் பேசினார்.

அவர் சொன்னார்: ''வி.வி.ஐ.பி. என்ற அடிப்படையில் பாதுகாப்பு விதிகள் சசிகலாவுக்குக் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. ரூபா சொல்வது போல சிறப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை... என்கிறார் சத்தியம் தவறாத சத்யநாராயண ராவ்.

ஆனால் சசிகலாவுக்குச் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்து இருப்பது போல ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.



இந்த நிலையில் சசிகலாவை வேறு ஒரு சிறைக்கு மாற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப் படுகிறது. அப்படி சிறை மாற்றப் பட்டால் தும்கூருவில் உள்ள மகளிர் சிறைக்குச் சசிகலாவை மாற்றலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிகலாவுக்குச் சொகுசு வசதிகள் கிடைக்க கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் உதவி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் தும்கூருவைச் சேர்ந்தவர். அவர் ஆஸ்திரேலியாவில் தொழில் செய்து வருகிறார். அங்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பை நடத்தி வருகிறார். 



இவர் அ.தி.மு.க.(அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு நெருக்கமானவர். இவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுடன் தொடர்புகளை வைத்துக் கொண்டு சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க உதவிகள் செய்து இருக்கிறார்.

அவர் மூலமாகச் சிறை அதிகாரிகளுக்குக் கோடிக் கணக்கான ரூபாய் பணம் லஞ்சமாக கைமாறி உள்ளது. சிறையில் வேலை செய்த சிலருக்கு மாதச் சம்பளத்தைப் போல் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் சொல்லப் படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக