15 ஏப்ரல் 2018

தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கு அநீதி

பீடோங், ஏப்.15-

கெடா பீடோங் வட்டாரத்தில் உள்ள சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியைக்கு பாலிங் மாவட்டத்தில் தொலைதூரத்தில் உள்ள கத்தும்பா தமிழ்ப்பள்ளிக்குத் திடீர் பணி  இட மாற்றம் செய்தது ஓர் அநீதி.

அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தொடர்ந்து சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியக் குழு, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் பெரும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இந்தத் தலைமையாசிரியரை அந்தப் பள்ளியிலேயே தக்க வைக்க கெடா மாநிலக் கல்வி இலாகாவின் உயர் அதிகாரிக்குப் பெற்றோர் ஆசிரியர் சங்கம், வாரியக் குழு, பள்ளியின் ஆசிரியர்களின் கையொப்பங்கள் அடங்கிய கடிதம் ஒப்படைத்து நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. மாற்றத்திற்குக் காரணம் சொல்லாத நிலையில் மாநிலக் கல்வி இலாகா கைவிரித்து விட்டது.

எந்தப் பலனும் கிடைக்காதப் பட்சத்தில் பெ.ஆ.சங்கமும் பள்ளி வாரியக் குழுவும் தலைமையாசிரியருக்கு ஆதரவாகப் போர்க்கொடி தூக்கி உள்ளது என்று பெ.ஆ.சங்கத் தலைவர் திருமதி வளர்மதி நிருபரிடம் கூறினார்

இந்தத் தலைமையாசிரியர் 2016-ஆம் ஆண்டு பள்ளிக்கு வந்தது முதல் பள்ளி பல நிலைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறது. மாணவர் கல்விநிலை, விளையாட்டில் பங்கெடுப்பு, பள்ளித் தோற்றம் என்று சொல்லிக் கொண்டு போகலாம் என்று பெ.ஆ.ச. தலைவர் திருமதி வளர்மதி கூறினார்.

தலைமையாசிரியரோடு இணைந்து இன்னும் பள்ளி  வளர்ச்சிக்காக முடிக்க வேண்டிய பணிகள் இருப்பதாகவும் அந்தப் பணிகள் முடியும் வரையில் இந்தத் தலைமை ஆசிரியர் இந்தப் பள்ளியில் பணிபுரிய கல்வி அமைச்சு உத்தரவு பணிக்க வேண்டும் என்பதையும் வாரியக்குழுத் தலைவர் திரு.லோகநாதன் கேட்டுக் கொண்டார்.

இந்தத் தலைமை ஆசிரியரின் திடீர் தொலைதூரப் பணி இட மாற்றத்தில் ஏதோ 'சூழ்ச்சி' அடங்கி உள்ளது என்று இந்த வட்டாரத்தில் பரவலாகப் பேசப் படுகிறது.

இது இந்த மலேசிய நாட்டில் ஒரு தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி. மலேசியத் தமிழர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு உரிமை கேட்போம்

2 கருத்துகள்: