கெடா வரலாறு - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கெடா வரலாறு - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 அக்டோபர் 2017

கெடா வரலாறு - 3

கெடாவை ஆட்சி செய்த தாம்பிரலிங்கா பேரரசு

இந்தோனேசியாவை ஸ்ரீ விஜய பேரரசு, மஜபாகித் பேரரசு, சைலேந்திரா பேரரசு, மத்தாரம் பேரசு, சிங்காசாரி பேரரசு போன்ற அரசுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து உள்ளன. 



இந்தப் பேரரசுகள் ஆட்சி செய்வதற்கு முன்னரே தீபகற்ப மலேசியாவை இன்னோர் இந்தியப் பேரரசும் ஆட்சி செய்து இருக்கிறது.

அந்தப் பேரரசின் பெயர் தான் தாம்பிரலிங்கா (Tambralinga) பேரரசு. கி.பி. 600-ஆம் ஆண்டுகளில் தீபகற்ப மலேசியாவின் வட பகுதிகளை தாம்பிரலிங்கா பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது.

தவிர தாய்லாந்தின் பற்பல பகுதிகளையும் ஆட்சி செய்து இருக்கிறது. அது மட்டும் அல்ல. ஆகக் கீழே தெமாசிக் வரை அதன் ஆட்சி பரந்து விரிந்து போய் இருந்து இருக்கிறது. சிங்கப்பூரின் பழைய பெயர் தான் தெமாசிக்.




சொல்லப் போனால் முக்கால்வாசி தென்கிழக்கு ஆசியாவையே அந்த தாமிபிரலிங்கா ஆட்சி செய்து இருக்கிறது. ஏறக்குறைய 600 ஆண்டுகளுக்கும் மேலாக தனிக்காட்டு ராஜா ஆட்சி.

தாம்பிரலிங்கா பேரரசிற்குப் பின்னர் வந்தவை தான் இந்தோனேசியாவின் ஸ்ரீ விஜய பேரரசு, மஜபாகித் பேரரசு போன்ற பேரரசுகள். ஆக தென்கிழக்கு ஆசியாவில் இந்திய ஆளுமைக்குப் பிள்ளையார் சுழி போட்ட ஓர் இந்திய அரசு இருந்தது என்றால் அது இந்தத் தாம்பிரலிங்கா பேரரசு தான்.

பூஜாங் சமவெளியை (Bujang Valley) இந்திய அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். தெரிந்த விசயம். அங்கே இந்து சமயமும் புத்த சமயமும் சம காலத்தில் வளர்ச்சி கண்டு இருக்கின்றன. தெரிந்த விசயம்.

இந்தப் பூஜாங் சமவெளியை முதன்முதலில் ஆட்சி செய்தது தாம்பிரலிங்கா பேரரசாகத் தான் இருக்க முடியும். நான் சொல்லவில்லை. வரலாற்று ஆசிரியர்களின் ஒருமித்தக் கருத்தும் அப்படித் தான் இருக்கிறது. இதையே மலேசிய வரலாற்று ஆசிரியர் டத்தோ நடராஜாவும் உறுதி படுத்துகிறார்.




ஒரு காலக் கட்டத்தில் தாம்பிரலிங்கா பேரரசு வரலாற்றில் இருந்து காணாமல் போய் விட்டது. எப்படி என்று கேட்க வேண்டாம். வரலாற்றுப் பதிவுகளில் இருந்து அடிபட்டுப் போய் விட்டது.

தாம்பிரலிங்கா எனும் ஓர் அரசு இருந்ததாகப் பலருக்கும் தெரியாமல் போனது. ஆனால் அண்மைய காலத்தில் தான் தாம்பிரலிங்கா பேரரசைப் பற்றிய உண்மைகள் தெரிய வந்துள்ளன.

1368-ஆம் ஆண்டில் இருந்து 1644-ஆம் ஆண்டு வரை சீனாவை மிங் அரசர்கள் (Ming dynasty) ஆட்சி செய்தார்கள். இவர்களின் காலத்தில் தான் சீன வரலாறு ஓரளவிற்கு முழுமையாக எழுதப் பட்டது.

அப்படி எழுதப்பட்ட வரலாற்றில் தான் தென்கிழக்காசிய வரலாற்றுப் பதிவுகளும் உள்ளன. சூ கோசென் (Zhu Guozhen), ஹு இங்லின் (Hu Yinglin), இன் கிங் (Yǐn Qìng) போன்ற சீன வரலாற்று ஆசிரியர்களை இங்கு குறிப்பிடுகிறேன். 




அந்தப் பதிவுகளில் தாம்பிரலிங்காவைப் பற்றி அந்தச் சமயத்தில் அவர்கள் கேட்டதை அவர்கள் பார்த்ததை எல்லாம் பதிவு செய்து இருக்கிறார்கள்.

(சான்று: http://link.library.canton.ma.us/portal/Coswells-guide-to-Tambralinga--a-novel-by/3iTEgdh6Ves/ - Coswell's guide to Tambralinga : a novel, by Scott Landers; Landers, Scott, 1952; New York, Farrar, Straus and Giroux, 2004)

இந்தத் தாம்பிரலிங்கா வரலாற்றுப் பார்வையில் ஒரு சிக்கலான இடத்தில் வந்து நிற்கிறோம். எப்படி புரிய வைக்கிறது என்று சற்றே தடுமாறுகின்றேன். இருந்தாலும் சமாளித்து விடுவோம். சரி.

முன்பு காலத்தில் அதாவது 10-ஆம் நூற்றாண்டில் நாகர ஸ்ரீ தர்மராஜா (Nagara Sri Dharmaraja) அரசு எனும் ஓர் அரசு தாய்லாந்தை ஆட்சி செய்து வந்து இருக்கிறது. எந்த ஆண்டு? பத்தாம் நூற்றாண்டு. சரிங்களா.

இந்த நாகர ஸ்ரீ தர்மராஜா அரசின் அப்போதைய அசல் பெயர் அதே நாகர ஸ்ரீ தர்மராஜா தான். ஆனால் அந்த அரசின் இப்போதைய பெயர் நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat). புரிந்து கொண்டீர்களா. பழைய பெயர் நாகர ஸ்ரீ தர்மராஜா. புதிய பெயர் நாக்கோன் சி தாமராட். இது ஒரு தாய்லாந்து மொழிச் சொல்.




ஆக இப்போதைய தாய்லாந்து வரலாற்றில் நாகர ஸ்ரீ தர்மராஜா எனும் பழைய பெயர் இல்லை. நாக்கோன் சி தாமராட் எனும் புதுப் பெயர் தான் இருக்கிறது. அந்தப் பெயரில் தான் அழைக்கப் படுகிறது. தாய்லாந்து பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் சொல்லப் படுகிறது.

(சான்று: http://link.library.canton.ma.us/portal/Coswells-guide-to-Tambralinga--a-novel-by/3iTEgdh6Ves/ - Coswell's guide to Tambralinga : Landers, Scott, 1952; New York, Farrar, Straus and Giroux, 2004)

மறுபடியும் கவனமாகக் கேளுங்கள். இந்த நாக்கோன் சி தாமராட் எனும் நாகர ஸ்ரீ தர்மராஜா இருக்கிறதே இந்த அரசின் முன்னைய பெயர் தான் தாம்பிரலிங்கப் பேரரசு.

முதன்முதலாக தாம்பிரலிங்கா என்று அழைத்து இருக்கிறார்கள். அதன் பின்னர் நாகர ஸ்ரீ தர்மராஜா என்று அழைத்து இருக்கிறார்கள். அதன் பின்னர் நாக்கோன் சி தாமராட் என்று அழைத்து இருக்கிறார்கள். இப்போதும் அழைத்து வருகிறார்கள்.

ஆக இந்தத் தாம்பிரலிங்கப் பேரரசு எனும் பெயர் தான் வரலாற்றில் இருந்து மறக்கப்பட்டு மறைந்து போன ஒரு இந்தியப் பெயர். புரியுதுங்களா.

தாம்பிரலிங்கப் பேரரசை ஆட்சி செய்த அனைவருமே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.




தாம்பிரலிங்கப் பேரரசின் வரலாறு ஓர் உண்மையான வரலாறு. அந்த வரலாற்று உண்மையை தாய்லாந்து மக்களும் ஏற்றுக் கொள்ள்கிறார்கள். அந்த வகையில் தாய்லாந்து நாட்டு மக்கள் வரலாற்றை வரலாறாகப் பார்க்கின்றார்கள்.

இந்தப் பக்கம் இந்தோனேசியாவில் இந்திய வரலாற்றைத் தங்களின் வரலாறாகப் போற்றிப் புகழ்கிறார்களோ அதே போலத் தான் தாய்லாந்து மக்களும் தாம்பிரலிங்கப் பேரரசை வாயாரப் போற்றிப் புகழ்கின்றார்கள்.

ஆனால் என்ன. நாக்கோன் சி தாமராட் என்று பெயரை மாற்றிப் புகழ்கின்றார்கள். மற்ற இடங்களில் அப்படியா. வரலாற்றுச் சுவடுகளை அவிழ்த்துப் போட்டு அந்தச் சுவடுகள் வெட்கப்படும் அளவிற்குச் சிதைத்து விட்டார்கள். சரிங்களா.

பின்னர் காலத்தில் அதாவது 12-ஆம் நூற்றாண்டில் இந்தத் தாம்பிரலிங்கப் பேரரசு தான் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமையின் கீழ் வந்தது. இந்தோனேசியாவை ஆட்சி செய்த ஸ்ரீ விஜய பேரரசைத் தான் சொல்கிறேன்.

அந்த வகையில் கூட்டிக் கழித்து வகுத்துப் பார்த்தால் பூஜாங் சமவெளியை இந்தத் தாம்பிரலிங்கப் பேரரசு தான் ஆட்சி செய்து இருக்க வேண்டும். இந்தத் தாம்பிரலிங்கப் பேரரசிற்குப் பின்னர் தான் பூஜாங் சமவெளியை ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது. 




மாறன் மகாவம்சன் எனும் பாண்டிய இளவரசனை விட்டு விடுவோம். ஏன் என்றால் இந்த தாம்பிரலிங்கா அரசு வருவதற்கு முன்னாலேயே ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே கடாரத்தில் கால் வைத்து விட்டுப் போய் விட்டார்.

கி.பி. 1025-ஆம் ஆண்டு ராஜேந்திர சோழன் என்பவர் கடாரத்திற்கு வந்தார். அந்தப் பச்சை மண்ணை மிதித்துத் துவைத்துக் காயப் போட்டுப் போனானே அந்தச் சமயத்தில் பூஜாங் சமவெளியின் ஆட்சி  ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் இருந்தது. இந்தக் காலக் கட்டத்தைத் தான் இப்போது குறிப்பிடுகிறேன்.

அந்தப் பார்வையில் பார்க்கும் போது ஸ்ரீ விஜய பேரரசிற்கு முன்னர் தாம்பிரலிங்கப் பேரரசு தான் ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்த தீபகற்ப மலேசியாவையே ஆட்சி செய்து இருக்கிறது.

(சான்று Munoz, Paul Michel, Early kingdoms of the Indonesian archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet, 2006.)

சரி. இனி தாம்பிரலிங்கா வரலாற்றுச் சான்றுகளைப் பார்க்கப் போகிறோம்.

கி.பி.600-ஆம் ஆண்டுகளில் தாங் வம்சாவளியினர் (Tang dynasty) சீனாவை ஆட்சி செய்து வந்தார்கள். அவர்களின் ஆட்சிக் காலத்தில் அதாவது கி.பி.616-ஆம் ஆண்டு காவ்சூ (Emperor Gaozu) எனும் அரசர் சீனாவை ஆட்சி செய்து இருக்கிறார். இவர் ஆட்சி செய்யும் போது தாம்பிரலிங்கா அரசு சீனாவிற்குப் பாதுகாப்புக் காப்பீடு வழங்கி உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் கப்பம் கட்டி இருக்கிறது. 




தாம்பிரலிங்கா என்றால் என்ன என்றும் சீனக் காலச் சுவடுகள் விளக்கம் கொடுத்து இருக்கின்றன. அவை தாங் (Tang dynasty) வம்சாவளிக் காலச்சுவடுகள்; மிங் (Ming dynasty) வம்சாவளிக் காலச்சுவடுகள்.

கி.பி.640; கி.பி.648;  கி.பி.818; கி.பி.860; கி.பி.873-ஆம் ஆண்டுகளில் தாம்பிரலிங்கா அரசர்கள் சீனாவிடம் கப்பம் கட்டி இருக்கிறார்கள். அந்தச் சுவடுகளின்படி தாம்பிரலிங்கா என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்.

தாம்பிரம் என்றால் செம்பு. இது சிவப்பு நிறத்தையும் குறிக்கும். லிங்கா என்றால் இந்துக்களின் சின்னம். சிவபெருமானைக் குறிக்கும் ஒரு தெய்வீகத் தன்மை என்று அந்தச் சுவடுகள் சொல்கின்றன.   

(சான்று: Cœdès, George, The Indianized states of Southeast Asia. Canberra: Australian National University Press, 1975.)

(சான்று: http://www.ayutthaya-history.com/References.html - The late David K. Wyatt was the John Stambaugh Professor Emeritus of History at Cornell University until his retirement.)

தாம்பிரலிங்கா அரசு ஒரு காலக் கட்டத்தில் ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் இருந்து இருக்கிறது. ஸ்ரீ விஜய பேரரசைச் சீனர்கள் சான்போகி (Sanfoqi) என்று அழைத்து இருக்கிறார்கள்.

தாம்பிரலிங்கா அரசு தீபகற்ப மலாயாவின் மத்தியப் பகுதியை ஆட்சி செய்து வந்து இருக்கிறது. இந்தத் தீபகற்ப மலாயாவின் மத்தியப் பகுதி தான் இப்போதைய தென் தாய்லாந்து ஆகும்.

மலாயாவுக்கு வந்த இலங்கை வணிகர்கள் தாம்பிரலிங்காவைச் சாவகம் (Savaka) என்று அழைத்து இருக்கிறார்கள்.

அராபிய வணிகர்கள் சபாஜ் (Zabaj) என்றும் சபாக்கா (Zabaka) என்றும் அழைத்து இருக்கிறார்கள்.

தென்னிந்திய வணிகர்கள் தாம்பிரலிங்கம் (Tambralingam) என்றும் வட இந்திய வணிகர்கள் தாம்பிரலிங்கராத் (Tambralingarath) என்றும் அழைத்து இருக்கிறார்கள். பாரசீக மொழியில் ராத் என்றால் நாடு.




தாம்பிரலிங்காவின் தலைப்பட்டினம் எதுவாக இருந்து இருக்கும் என்பதைப் பற்றி இன்றும்கூட ஆய்வு செய்து வருகிறார்கள். கிரேக்க நாட்டு அறிஞர் குளோடியஸ் தாலமி (Claudius Ptolemy) பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இவர் ஒரு புவியியலாளர்; ஒரு வானியலாளர்; ஒரு சோதிடர்.

பல அறிவியல் நூல்களை எழுதியவர். அவர் எழுதிய நூல்களில் மிகவும் புகழ்பெற்றது வானியல் துறை சார்ந்த அல்மாகெஸ்ட் (Almagest) எனும் நூலாகும். அடுத்தது ஜியோகிரபியா (Geographia) எனும் புவியியல் தொடர்பான நூல்.

இந்த நூலில் தான் தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் படம் வரைந்து காட்டி இருக்கிறார். கி.பி.100-ஆம் ஆண்டுகளில் தென்கிழக்காசியாவில் தக்கோலா (Takola Emporium) எனும் துறைமுகம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி இருக்கிறது.

இந்தத் துறைமுகம் கிரா குறுநிலத்தின் (Isthmus of Kra) மேற்குக் கரையில் இருந்தது என்று எழுதி இருக்கிறார்.

ஒரு செருகல். மலாயாவையும் தாய்லாந்து நாட்டையும் இந்தக் கிரா குறுநிலம் தான் பிரிக்கிறது. சரி. 




தாம்பிரலிங்கா அரசின் தலைப்பட்டணமாகத் தக்கோலா துறைமுகம் இருந்து இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்து கூறுகின்றனர்.

தக்கோலா துறைமுகத்தில் தென்னிந்தியாவின் கலிங்கத்தைச் சேர்ந்த தமிழர்கள் அதிகமாகக் குடியேறியதாகவும் அகழாய்வுச் சான்றுகள் கூறுகின்றன.

(சான்று: http://www.globalsecurity.org/military/world/malaysia/history-takola.htm - Judging from the only ancient inscription fromTakopa district the settlers from India are Dravidians from East coast of India where Tamil was spoken.)

ஆனாலும் அந்தத் தமிழர்கள் அங்கே ஓர் அரசாங்கத்தை உருவாக்கி இருக்க முடியாது என்பதே வரலாற்று ஆசிரியர்கள் பலரின் பொதுவான கருத்து.

எது எப்படி இருந்தாலும் தாம்பிரலிங்கா எனும் ஓர் இந்திய அரசு மலாயா தீபகற்பத்திலும் தாய்லாந்து நாட்டிலும் கோலோச்சி இமயம் பார்த்து இருக்கிறது. பற்பல போர்க் கோலங்களில் உச்சம் பார்த்து இருக்கிறது. 




இந்தப் பேரரசைப் பற்றிய கல்வெட்டுகள் அல்லது அகழ்வாய்வுகள் எதுவும் அதிகமாகக் கிடைக்கவில்லை. சீன வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தான் அப்படி ஓர் அரசு இருந்ததாக வரலாறும் சொல்கிறது.

பூஜாங் சமவெளியில் மேலும் ஆழமான அகழாய்வுகள் செய்தால் தாம்பிரலிங்கா அரசைப் பற்றிய ரகசியங்கள் வெளியே வரலாம். மலாயா வரலாற்றையே மலைக்க வைக்கும் ரகசியங்கள் மீட்கப் படலாம். ஆனால் அகழாய்வுகள் செய்ய விடுவார்களா.

பூஜாங் சமவெளியைப் பற்றி அக்குவேர் ஆணிவேராகப் பிட்டு பிட்டு வைத்த டத்தோ நடராஜன் அவர்களையே ஓரம்கட்டி விட்டார்கள். அப்புறம் என்னங்க. அவருக்குத் துணையாக நிற்கும் என்னுடைய கோத்தா கெலாங்கி வரலாற்றுப் போராட்டங்களும் அடிபட்டுப் போகின்றன. வேதனையாக இருக்கிறது.

எவ்வளவு காலம் தான் சொந்தப் பணத்தில் ஆய்வுகள் செய்வதாம். சொல்லுங்கள். செடிக், தமிழ் அறவாரியம் போன்ற அமைப்புகள் இப்படிப்பட்ட வரலாற்று ஆய்வுகளுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். உதவி செய்வார்களா? இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி.




கெடா வரலாறு  1
கெடா வரலாறு  2
கெடா வரலாறு  3