பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 செப்டம்பர் 2017

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4

நீல உத்தமன் பார்த்தது சிங்கமாக இருக்க முடியாது. ஏன் என்றால் இந்த உலகில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டும் தான் சிங்கம் இருக்கிறது. ஒன்று ஆப்பிரிக்க நாடுகள். மற்றொன்று இந்தியா. ஆக சிங்கப்பூரில் சிங்கம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.


நீல உத்தமன் இறந்ததும் அவருடைய உடல் சிங்கப்பூரின் புக்கிட் லாராங் (Fort Canning Hill) எனும் புக்கிட் லாராஙான் (Bukit Larangan) குன்றின் அடிவாரத்தில் புதைக்கப் பட்டது.

அவருடைய மனைவியும் அங்கே தான் புதைக்கப் பட்டார். வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன. இருந்தாலும் அவர்களுடைய சமாதிகளை இன்று வரை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேதனையான செய்தி. (Tsang, Susan; Perera, Audrey (2011), Singapore at Random, Didier Millet)

அதன் பின்னர் சிங்கப்பூரின் ஆட்சிப் பொறுப்பு அவருடைய மகன் ஸ்ரீ விக்ரம வீரா (Seri Wikrama Wira) என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டது. ஸ்ரீ விக்ரம வீராவின் தாயார் பெயர் ஸ்ரீ பினி (Sri Bini). அதாவது நீல உத்தமனின் மனைவியின் பெயர் ஸ்ரீ பினி. இந்தப் பினி எனும் சொல்லில் இருந்து தான் பினி (மனைவி) எனும் மலாய்ச் சொல்லும் உருவானது.

ஸ்ரீ விக்ரம வீரா 1362-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார். ஸ்ரீ விக்ரம வீராவின் மனைவியின் பெயர் நீலா பாஞ்சாலை. இவருடைய காலத்தில் தான் ஒரு பெரிய சயாமியத் தாக்குதலும் நடந்தது.

வடக்கே இருந்து 70 கப்பல்களில் சயாமியர்கள் வந்தனர். பயங்கரமான தாக்குதல் நடத்தினர். இருந்தாலும் சிங்கப்பூரை அசைக்க முடியவில்லை. மூன்று மாதம் வரை தாக்குப் பிடித்தது.

அதற்குள் சீனாவில் இருந்து சீனக் கடற்படை களம் இறங்கி விட்டது. கடைசியில் சயாமியர்களின் முற்றுகை தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் ஸ்ரீ விக்ரம வீரா 1362-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் ராஜாவாக இருந்தார்.

ஸ்ரீ விக்ரம வீராவிற்குப் பின்னர் ஸ்ரீ ரானா விக்கிரமா (Sri Rana Wikrama) என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர் சிங்கப்பூரின் மூன்றாவது ராஜா. 1375ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் சிங்கப்பூரை ஆட்சி செய்தார். (சான்று: Dr. John Leyden (1821). Malay Annals பக்: 44–49)

இவருக்குப் பின்னர் வந்தவர் தான் ஸ்ரீ மகாராஜா. இவர் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன். 1375 ஆண்டில் இருந்து 1389 வரை சிங்கப்பூரின் ராஜாவாக இருந்தார்.

1375ஆம் ஆண்டில் இருந்து 1389 வரை என்ன நடந்தது எனும் விவரங்கள் நமக்கு சரியாகக் கிடைக்கவில்லை. இதைப் பற்றியும் ஆய்வுகள் செய்து கொண்டு வருகிறார்கள்.

ஆகக் கடைசியாக வந்தவர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா. இவர் சிங்கப்பூரை 1389 லிருந்து 1398 வரை ஆட்சி செய்தார். இவர் தான் மலாக்காவைத் தோற்றுவித்த பரமேஸ்வரா. சரிங்களா.

இவர் சிங்கப்பூரின் ராஜாவாக இருந்த போது சுமத்திராவின் மஜாபாகித் அரசு சிங்கப்பூர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார்.

பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா. மறுபடியும் சொல்கிறேன். இவர் தான் நீல உத்தமனின் கொள்ளுப் பேரனின் மகன். இருந்தாலும் கொள்ளுப் பேரன் என்று சொல்லலாமே.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார் எனும் இடத்தை அடைந்தார். 


 (தொடரும்)