12 ஆகஸ்ட் 2016

தமிழினமும் தமிழ்மொழியும்

தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அதிகம் அறியாத ஓர் இனம் உலகில் இருக்கிறது என்றால் அது தமிழ் இனமாகத்தான் இருக்கும். 


அதனால் தான் ஒரு தமிழன் என்று அறியாமல்... புரியாமல்... தெரியாமல் தன்னைத் திராவிடன் என்றும்... இந்தியன் என்றும் தமிழர்களே சிலர் சொல்லிக் கொள்கிறார்கள்.

மொழி இன வரலாற்றை அறிந்த தமிழர்களில் ஒரு பகுதினர் தாம் இன்னமும் தமிழினத் தொப்புள் கொடி அறிந்து போகாமல் பாதுகாத்து வருகின்றனர்.

இவர்களால் தான் இன்னமும் உலகத்தில் தமிழினமும் தமிழ்மொழியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்றால் மிகையன்று.

தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அறியாத நிலையிலும்... அறிந்து கொள்ள விரும்பாத நிலையிலும் தமிழர்கள் பலவகையிலும் தாழ்ந்து போய் இருக்கின்றனர்.

அதுமட்டும் அல்ல... அன்னிய மொழி, இன, பண்பாடு, கலை, நாகரிகத்திற்கு அடிமைகளாகவும் அடிவருடிகளாகவும் பெரும்பான்மைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். தன்னுடைய சொந்தக் கால் இருப்பதே தெரியாமல் செயற்கைக் காலில் நின்று கொண்டு இருக்கிறனர்.

என்னே பரிதாபம்... என்னே அறியாமை...

இத்தகைய மூட நம்பிக்கையின் காரணமாக தமிழையும் தமிழின மரபுகளையும் எதிர்க்கவும் துணிகின்றனர்... வேரோடு அழித்துவிட முயற்சியும் செய்கின்றனர்.

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அறிந்து இருக்கிறதோ... அந்த இனமே தன்னம்பிக்கை கொண்ட இனமாக இருக்கும்.

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை உயர்த்திப் பிடிக்கிறதோ... அந்த இனமே தன்மானத்துடன் வாழும்.

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை முன் எடுக்கிறதோ... அந்த இனமே தலை நிமிர்ந்து முன்னேறும்.

மொழி இன வரலாறு அறியாமல் தெரியாமல் கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என எப்படி முன்னேறினாலும் அது முழுமையான முன்னேற்றமாக அமைந்து விடாது.

தாய்மொழி ஒருவரின் பிறப்புரிமை

சொந்த மொழியைப் பற்றி சிந்திப்பதும்... 
சொந்த தாய்மொழியை வளர்ப்பதும்... 
சொந்தத் தாய்மொழியைக் காப்பதும் ஒவ்வொருவரின் பிறப்புரிமை...

சொந்த மொழியைக் கற்க மாட்டாதவன்...
சொந்த மொழியயைக் கற்பிக்க மாட்டாதவன்...
சொந்த மொழியைக் காக்க மாட்டாதவன் நல்லறிவு இல்லாதவன்...

தொல்காப்பியன் தொடங்கி இன்றைய கொள்ளுப் பேரன் வரையில் தமிழைக் காத்து நிற்பவர் ஆயிரமாயிரம் பேர் உள்ளனர்...

வாழையடி வாழையென வந்த தமிழ்ப் பற்றாளர்களை ஏளனம் செய்ய வேண்டாம்...

அவனவன் வாயாலன்றிப் பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணாலன்றிப் பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியாலன்றிப் பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப் பிறனெவன் காப்பான் வந்தே!

28 ஜூலை 2016

சாதிகள் இல்லையடி பாப்பா

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி,கல்வி - அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்

 
சாதிகள் இல்லையடி பாப்பா... குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்... என்று பாடும் போது ஏற்படும் உணர்ச்சியும் அதை ஒட்டி எழும் சமுதாயக் கோபமும் குறைந்த பட்சம் அவர் அவர் வாழ்க்கையில் கூட நடைமுறையாக உருமாறுவது இல்லை. 
 

 அதைவிட பாரதி தாழ்த்தப் பட்டவர்களுக்குத் தான் அதை எழுதி இருக்கிறார் என்பதைப் போலத் தான் சிலரின் நினைப்பும் இருக்கிறது.

எனக்கு தெரிந்த நாடறிந்த மூத்தக் கல்வியாளர் ஒருவர். முக்கிய பிரமுகர்கள் தலைமை ஏற்று இருந்த ஒரு சாதிச் சங்கச் சந்திப்பில் அங்கலாய்த்து இருக்கிறார். இது அண்மையில் நடந்த நிகழ்ச்சி. 

எழுத்தில் ஒன்றும் நடத்தையில் ஒன்றுமாய் வேசம் போடும் அந்த மாதிரி ஆட்களுக்குத் துணை போவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. 


வெளிப்படையாக இல்லை. ஆனால் காதோடு காது வைத்த மாதிரி இந்த சாதிப் பிரச்சினை மிகவும் அணுக்கமாக மறைமுகமாக உலாவிக் கொண்டு இருக்கிறது. அதை ஒழிக்க வேண்டும் என்பதே என்னுடைய போராட்டம்.

நம் நாட்டில் தலைதூக்கி விரித்தாடும் சாதி அமைப்புகளையும் சாதிச் சங்கங்களையும் இளைய தலைமுறையினர் நிராகரிக்க வேண்டும். 

என் காலத்தில் சாதி இல்லாமல் போகும் என்று நம்பினேன். அது நடக்கவில்லை. அதன் தாக்கமே பலரைப் பகைத்துக் கொள்ளச் செய்கிறது.

17 ஜூலை 2016

தமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும்

சோதிடத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற சோதிட வல்லுநர்கள் பலர் உள்ளனர். அவர்களைச் செந்தூரப் பூக்களாய் உயர்த்திப் பார்க்கிறோம். அதே சமயத்தில்... தமிழில் சரியாக எழுதப் படிக்கத் தெரியாதவர்களில் சிலரும் பஞ்சாங்கப் பைகளைத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள் போகிறார்கள்.



இவர்களால் தான் சோதிடத்திற்குச் சோதனை மேல் சோதனைகள். அவர்களை மந்தாரப் பூக்களாய்த் தான் தாழ்த்திப் பார்க்கிறோம்.

அந்த மாதிரியான சில பல கற்றுக் குட்டிகளினால் பாவம்... நம்மில் பலர் சோதிடத்தில் ரொம்பவுமே நம்பிக்கை இழந்து போகின்றோம். அதனால் சோதிடத் துறையை அறிவியல் கோணத்தில் அலசிப் பார்க்க வேண்டிய ஒரு கட்டாயத்திலும் தள்ளப் படுகின்றோம்.

சோதிடம் உண்மையா... பொய்யா... நம்பலாமா... வேண்டாமா... என்று பலரும் பல கோணங்களில் அலசிப் பார்த்து அவதிப் படுகின்றனர். ஆனால் யாராலும் எவராலும் எந்த ஒரு தெளிவான முடிவையும்... இதுவரையிலும் எடுக்க முடியவில்லை.

இன்னும் சிலர் சோதிடத்தில் பாதி உண்மை... பாதி பொய் என்றும் சொல்கின்றனர். இதில் எந்தப் பாதி உண்மை... எந்தப் பாதி பொய்... தலை சுற்றிக் கிறுகிறுத்தும் போகிறது.

ஜோசியம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். ஜீயோடிஸ் (Jyótis) எனும் சொல்லில் இருந்து பிறந்தது. இந்தியச் சோதிடத்தில் இரு பிரிவுகள் உள்ளன. முதலாவது இந்து சோதிடம்.

அடுத்தது வேத சோதிடம். ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் நவக் கிரகங்கள் எந்த நிலைகளில் எந்த அமைப்புகளில் அமைந்து இருந்தன என்பதைக் கணக்கிட்டுச் சொல்வது தான் ஜாதகம். அந்த வகையில் தான் ஒரு குழந்தையின் ராசி, நட்சத்திரம், இலக்கணம் போன்றவை குறிக்கப் படுகின்றன.

காலக் கணிப்பு முறையினால் உருவானது பஞ்சாங்கம். ஆக பஞ்சாங்கம் என்பது ஒரு கால அட்டவணை. வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து பிரிவுகளைக் கொண்டது. சரி.

அடுத்து... சோதிடம் என்பது அறிவியல் கோணத்தில் உறுதிப் படுத்த முடியாத ஒரு துறை ஆகும். இதை நாம் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.

அதாவது சோதிடத் துறைக்கு அறிவியல் அடிப்படைச் சான்றுகள் எதுவும் இல்லாமல் போனது தான். Hypothethical என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

அது ஒரு வகையான மூடநம்பிக்கை என்பது இன்னும் ஒரு சாராரின் கருத்து. சோதிடத்தை நம்புவதும் நம்பாததும் அவரவரின் தனிப்பட்ட உரிமை. அந்த நம்பிக்கையில் தலையிடுவதற்கு நமக்கு உரிமை இல்லை. ஆனால் நம்முடைய (அறிவியல்) கருத்துகளைச் சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது. சரிங்களா...

சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Sir Venkatraman Ramakrishnan) பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். 2009-ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றவர். ரைபோசோம் (Ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது பற்றி ஆய்வுகளைச் செய்தார். நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் சொல்கிறார்.

‘ஒருவர் பிறந்த நேரத்திற்கும்... கோள்களின் இயக்கத்திற்கும்... அவர் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் அது போன்ற ஒரு நம்பிக்கை ஒருவரிடம் வேர் ஊன்றிப் போய் விட்டால் அதை மாற்றுவது என்பது கடினம்’ என்கிறார்.

சண்டிகாரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஓர் அறிவியல் கருத்தரங்கில் அவர் அவ்வாறு கூறினார். (சான்று: https://ta.wikipedia.org/s/bnh). இது ஓர் அறிவியலாளரின் கருத்து. சரிங்களா.  

சோதிடம் என்பதை ஆங்கிலத்தில் Astrology என்று கூறுகிறோம். விண்மீன்கள் பற்றிய நம்பிக்கை என்பதே அதன் பொருள். விண்மீன்கள் என்றால் நட்சத்திரங்கள். சரி. Astrology எனும் சொல்லைப் பிரித்துப் பாருங்கள். Astro என்றால் Star. அடுத்து Logy என்றால் நம்பிக்கை அல்லது படிப்பு.

ஆக சோதிடம் என்பது முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது தான். அதில் மாற்றுக் கருத்துகள் எதுவும் இல்லை. ஆக ஆதிகால மனிதனின் வாழ்க்கையில் பூமியில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு வானில் தெரியும் பொருட்கள் நகர்வதே காரணம் என அவன் ஒரு கற்பனையை உருவாக்கி வைத்துக் கொண்டான். [Hansson, Sven Ove; Zalta, Edward N. "Science and Pseudo-Science". Stanford Encyclopedia of Philosophy.]

வானவியல் (Astronomy), சோதிடம் (Astrology) இந்த இரண்டும் வேறு வேறு துறைகள் தான். இருந்தாலும் இந்த இரண்டுமே வான் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு உருவானவை. இரண்டிற்குமே சில பல பொதுவான அம்சங்கள் உள்ளன.

சூரியக் குடும்பத்தில் சூரியன் (Sun), பூமி (Earth), சந்திரன் (Moon), புதன் (Mercury), வெள்ளி (Venus), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune), புளுட்டோ (Pluto) ஆகிய கிரகங்கள் உள்ளன. தெரிந்த விசயம்.

ஆனால் சோதிடத் துறை சூரியனையும் சூரியனைச் சுற்றி வரும் கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றை மட்டுமே குறிப்பிடுகின்றது. சூரியக் குடும்பத்தின் மற்ற கோள்களான யுரேனஸ், நெப்டியூன் பற்றி மூச்சு விடவே இல்லை.

அது மட்டும் அல்ல. சோதிடக் கட்டத்தில் நம் சூரியக் குடும்பத்தின் தலைவரான சூரியனையும் ஒரு கோளாகவே குறிப்பிடுகின்றனர். [Bok, Bart J.; Lawrence E. Jerome; Paul Kurtz (1982). "Objections to Astrology: A Statement by 186 Leading Scientists.] சூரியன் ஒரு கோள் அல்ல. அது ஒரு நட்சத்திரம்.

அடுத்து பூமியின் துணைக் கோளம் சந்திரன். இதற்கும் சோதிடத்தில் மற்ற கோள்களைப் போல ஒரு பதவி தரப் படுகிறது. அது தவறு என்று அறிவியலாளர்கள் சொல்கின்றனர். சந்திரன் ஒரு கோள் அல்ல. அது பூமியின் துணைக்கோள் ஆகும்.

ஆக, ஒரு துணைக்கோள் எப்படி கோள் ஆக முடியும். பூமியின் துணைக் கோளான சந்திரனைக் கோளாகக் குறிப்பிடுவது வானியல் கோட்பாட்டிற்கு முற்றிலும் புறம்பானதாகும்.

மறுபடியும்... சோதிடத்தில் யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களைப் பற்றி குறிப்பிடப் படவே இல்லை. ராகு, கேது ஆகியவை கோள்கள் என்று சோதிடத்தில் குறிப்பிடப் படுகின்றன. நல்லது.

உண்மையில் இந்த ராகு, கேது இரு கோள்களுமே சூரியக் குடும்பத்தில் இல்லவே இல்லை. உருவமும் அருவமும் இல்லாத கோள்கள். அசல் கற்பனையான கோள்கள் ஆகும். கற்பனையான கோள்களை வைத்துக் கொண்டு பஞ்சாங்கம் எழுதப் படுகிறது என்பது அறிவியலாளர்களின் கருத்து. [Subbarayappa, B. V. (14 September 1989). "Indian astronomy: An historical perspective".]

பாம்பு என்ற ஒரு ஜீவனைக் கொண்டு வந்து... அதன் தலையைத் தனியாக்கி... தலைக்கும் பாம்புக்கும் தனித் தனியாக ராகு கேது என்று பெயரைச் சூட்டி இருக்கிறார்கள்... இதை மறுபடியும் சொல்ல வேண்டி வருகிறது.

ராகு, கேது எனும் கோள்கள் வானவியலில் (Astronomy) கிடையவே கிடையாது. இவை ஆதிகால மனிதனின் கற்பனைக் கோள்கள் ஆகும்.

காலம் காலமாக மனிதன் தனக்குத் தெரிந்த விசயங்களையும் தெரியாத விசயங்களையும் வானத்தை அண்ணாந்து பார்த்துத் தெரிந்து கொண்டு வந்து இருக்கிறான். அப்போது பூமியில் எதேச்சையாக சில நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன.

அந்தக் காலக் கட்டத்தில் அப்போது வாழ்ந்த சில அறிவு ஜீவிகள் அந்த இரண்டையும் தொடர்பு படுத்தி பாமர மக்களிடம் பாராட்டுகளைப் பெற்று இருக்கின்றனர்.

ஆக மனிதனின் வாழ்நாள் நிகழ்வுகளுக்கு... வானில் வலம் வரும் சூரியன் சந்திரனில் ஏற்படும் நிகழ்வுகளும் நகர்வுகளுமே காரணம் என்று முடிவு செய்து இருக்கின்றனர்.

Astrology thus lost its academic and theoretical standing and common belief in it has largely declined. Astrology is now recognized to be pseudoscience.

சூரியனும் சந்திரனும் ஒளிவிடும் பொருட்கள். அவற்றின் இயற்பியல் காரணங்களைப் பற்றி அந்தக் கால மனிதர்களுக்கு எதுவுமே தெரியாமல் இருந்து இருக்கிறது. எதனை எதனோடு இணைப்பது என்ற ஆர்வத்தில் பிறந்தது தான் சோதிடம். நான் சொல்லவில்லை. இதுவும் ஓர் அறிவியலாளரின் கருத்து. [Zarka, Philippe (2011). "Astronomy and astrology". Proceedings of the International Astronomical Union 5 (S260): 420–425]

நீங்கள் வசிக்கும் இடத்தில் யாராவது புதிதாக வந்து நடமாடிக் கொண்டு இருந்தால்... அவரைப் பற்றி நமக்குத் தெரிந்தது தெரியாதைப் பற்றி எல்லாம்... சும்மா எடுத்து விடுகிறோம். இல்லையா... அந்த மாதிரி தான் இதுவும். அள்ளி விடுவதிலும் நல்ல சுகம் கிடைக்கலாம். அப்போது இல்லை இப்போது.

ஆக, வானில் தெரிந்த சூரியன், சந்திரன் மற்றும் சில கோள்களை விண்மீன்களுடன் தொடர்பு படுத்தி மனிதனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, திருமணம், குழந்தைப் பேறு, கெட்ட நிகழ்வுகள் போன்றவற்றைக் கணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பின்னர் காலத்தில் அதுவே ஒரு துறையாக உருவெடுத்து வளர்ந்த கதைதான் சோதிடத்தின் வரலாற்றுக் கதை.

சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள் போன்றவை இந்த இந்த இடத்தில் இருந்த போது... இந்த இந்த நிகழ்வுகள் நடந்தன என்ற ஒரு தற்செயல் நிகழ்ச்சியால் உருவானதுதான் சோதிடம். அதனால் தான் ஆதிகால கணிதவியலாளர்கள் எல்லாரும் வானவியல், சோதிடம், நிலவியலில் விற்பன்னர்களாக இருந்துள்ளனர்.

சோதிடம் என்பது முன்பு காலத்தில் மன்னர்களின் காரண காரியங்களுக்குக் குறிசொல்லும் பழக்கமாக இருந்து வந்துள்ளது. அப்படித் தொடங்கிய சோதிடம் தான் சன்னம் சன்னமாய்ப் பாமர மக்களிடம் வந்து ஒட்டிக் கொண்டது. அப்படியே பீடு நடையும் போட்டது.

இன்றைக்கு வீடு கட்டுதல், புதுமனை புகுதல், பெயர் சூட்டுவது போன்றவற்றில் தொடங்கி சகுனம் பார்ப்பது வரை வந்து நிற்கிறது. அடுத்து வாஸ்து பார்ப்பதிலும் போய் முடிகிறது. தயவு செய்து நம்மைத் தவறாக எடை போட்டு விட வேண்டாம். நம்முடைய கருத்துகளைச் சொல்கிறோம். மாற்றுக் கருத்துகள் இருந்தால் சொல்லலாம்.

சோதிடத்தில் அறிவியல் கூறுகள் மிக மிகக் குறைவாக உள்ளன. ஆகவே அதனை நகல் அறிவியல் என்றும் அழைக்கிறார்கள்.

சோதிட நம்பிக்கை பழங்கால வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தே வளர்ந்து வந்துள்ளது. நம் பிரச்சனைகளுக்கு யாராவது வழி காட்ட மாட்டார்களா... உதவிக் கரம் நீட்ட மாட்டார்களா... நம்முடைய வெற்றித் தோல்விகள் நம் கையில் இல்லை... வேறு யாரோ ஒருவர் தான் காரணம்... இந்த மாதிரியான தன்னம்பிக்கை குறைவினாலும் சோதிடம் செழித்து வளர்ந்தது.

உலகின் பல்வேறு நாகரிகங்களிலும் அந்தந்த நாகரிகங்களின் கணிப்புப் படியே சோதிடமும் அப்போது உருவாக்கப்பட்டது. சுமேரியா, பாபிலோனியா, சீனா, இந்தியா, எகிப்து, கிரிஸ், ரோமானிய நாகரிகங்களிலும் சோதிடம் பற்றி பேசப் படுகிறது. ஆனால் அவற்றின் கணிப்புகள் வேறு மாதிரியானவை. ஒன்றை ஒன்று சார்ந்தவை அல்ல. தனித் தனியாக உருவானவை. அதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இந்திய வானின் சூரிய வீதியில் காணப்படும் விண்மீன் தொகுதிகளை 27 நட்சத்திரங்களாகவும் 12 ராசிகளாகவும் பிரித்து உள்ளனர், ஒவ்வொரு ராசிக்கும் 2 ¼ விண்மீன் தொகுதிகள் என கூறப்பட்டு உள்ளது.

தமிழில் தான் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் அனைத்துலக வானியல் கழகத்தினர் வானில் தெரியும் விண்மீன் தொகுதிகளை 88 விண்மீன் படலங்களாகப் பிரித்து உள்ளனர். இவற்றில் முக்கியமானவை வடதுருவப் பெருங்கரடிக் கூட்டம், துருவ விண்மீன், தென்பகுதி தெற்குச் சிலுவை ஆகியவை ஆகும். இவை பொதுவாக இடம் மாறுவது இல்லை. இவை துருவத்தைச் சுற்றி வருதால் துருவம் சுற்றும் விண்மீகள் என அழைக்கப் படுகின்றன.

இன்னும் ஒரு விசயம். யுரேனஸ் (Uranus) கிரகம் 1781ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. வில்லியம் ஹெர்சல் (Sir William Herschel) என்பவர் கண்டுபிடித்தார். நெப்டியூன் (Neptune) கிரகம் 1846ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. புளுட்டோ (Pluto) கிரகம் 1930ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் ஒரு கிரகம் இருக்கிறது. அதன் பெயர் செரிஸ் (Ceres). இது ஒரு குறுங்கோள் (dwarf planet) ஆகும். இந்தக் கிரகம் 1801ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. சரி.

சோதிடம் என்பது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. 2500 ஆண்டுகளுக்கு முன்னாலேயே வந்துவிட்டது. சரி. அண்மையில் சூரிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நான்கு கிரகங்களையும் எதில் கொண்டு போய் சேர்க்கப் போகிறார்களாம்.

ஒன்பது கிரகங்களைக் கொண்டு பஞ்சாங்கம் எழுதப்பட்டது.  இப்போது பத்து கிரகங்கள் உள்ளன. அப்படி என்றால் உலகத்தில் உள்ள எல்லா பஞ்சாங்கங்களையும் மாற்ற வேண்டி வருமே. என்ன செய்யப் போகிறார்களாம். எந்த ஒரு தனிப்பட்ட பஞ்சாங்கத்தையும் சுட்டிக் காட்டவில்லை.

இன்று இரவு அடிவானில் தோன்றும் விண்மீன் (நட்சத்திரம்) ஒன்றின் நேரத்தைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு நட்சத்திரம். பெயர் தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

மறுநாள் அது எத்தனை மணிக்கு உதிக்கிறது என்பதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எப்படிப் பார்த்தாலும் அந்த நட்சத்திரம் 4 நிமிடம் தாமதமாகத் தான் வானில் தெரியும். ஏன் தெரியுமா. நம் பூமியின் சூழற்சி தான் அதற்குக் காரணம்.

இதைத் தவிர நட்சத்திரங்களும் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆக என்றோ எப்போதோ வானில் பார்த்த நட்சத்திரங்களைக் கணக்கில் வைத்துக் கொண்டு சோதிடம் கணிக்கப் படுகின்றது என்று நான் சொல்லவில்லை. நோபல் பரிசு பெற்ற சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சொல்கிறார். 

வானில் தெரியும் அத்தனை நட்சத்திரங்களும் தங்களின் பழைய இடத்தில் இருந்து என்றோ எப்போதோ இடம் பெயர்ந்து ‘பை பை’ சொல்லி ஆயிரம் ஆயிரம் மாமாங்கங்கள் ஆகிவிட்டன. இப்போது கணித்துச் சொல்லப்படும் நட்சத்திரங்கள் பல 100 ஒளியாண்டுகள் தொலைவிற்கு நகர்ந்து போய் விட்டன.

எடுத்துக் காட்டாக திருவாதிரை நட்சத்திரம். 640 ஒளியாண்டுகள் தூரத்திற்கு நகர்ந்து போய் விட்டது. நடப்பது வேறு கணிப்பது வேறு.

அறிவியல் என்றால் அறிவு + இயல். மனித அறிவு சார்ந்த ஒரு துறை. மிகச் சரியான சான்றுகளுடன் உறுதிபடுத்தும் துறை. ஆக, சோதிடத்தின் மீது அவரவர் கொண்டு இருக்கும் நம்பிக்கையில் தலையிடுவதற்கு நமக்கு உரிமை இல்லை என்பதை மறுபடியும் வலியுறுத்துகிறேன். இந்தக் கட்டுரையின் மூலமாக சிலருக்கு வருத்தங்கள் ஏற்படலாம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

சான்றுகள்:

1. Sven Ove Hansson; Edward N. Zalta. "Science and Pseudo-Science". Stanford Encyclopedia of Philosophy.
2. Vishveshwara, edited by S.K. Biswas, D.C.V. Mallik, C.V. (1989). Cosmic Perspectives: Essays Dedicated to the Memory of M.K.V. Bappu (1. publ. ed.).
3. Astronomical Pseudo-Science: A Skeptic's Resource List". Astronomical Society of the Pacific.
4. Thagard, Paul R. (1978). "Why Astrology is a Pseudoscience" (PDF).
5.www.helsinki.fi/teoreettinenfilosofia/oppimateriaali/Sintonen/Paul_R._Thagard_-_Why_Astrology_Is_A_Pseudoscience.pdf

தமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2

தினத்தந்தி (மலேசியா) – 19.03.2016

பெங்களூரைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள கர்நாடகத்தினர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அபாரம் அற்புதம். மிகவும் புத்திசாலித் தனமாகக் காய்களை நகர்த்தி இருக்கிறார்கள். 


உண்மையிலேயே பெங்களூரு நகரம் தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய இடம். திருப்பதியும் தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய இடம். அது தெரியுமா உங்களுக்கு...

ஆனால் எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. அப்போது தமிழ்நாட்டில் இருந்த அரசியல்வாதிகள் கட்டி இருக்கிற கோவணத்தையும் வேட்டியையும் அவிழ்த்துக் கொடு என்று கேட்டு இருந்தால்... வெட்கம் சூடு சொரணை இல்லாமல் கழற்றிக் கொடுத்தாலும் கொடுத்து இருப்பார்கள். அப்பேர்ப்பட்ட தர்மகர்த்தாக்கள்.

அந்த அரசியல்வாதிகள் எல்லோரும் மேலே இருந்த மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தானே. பந்த பாசம் கொஞ்சமாவது இருக்கத் தானே செய்யும். தப்பாக நினைக்க வேண்டாம். வாழ்ந்த வீட்டிற்காக வாழப் போகிற வீட்டை இடித்து உடைத்துப் பார்க்கலாமா. இது தான் என்னுடைய ஒன் மில்லியன் டாலர் கேள்வி.


1956-இல், இந்தியாவின் மாநிலங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப் பட்டன. ஒரு மாநிலத்துடன் வேறொரு மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு இருக்க வேண்டும். அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும். அதுதான் நடுவண் அரசு முதலில் சொன்ன விதி முறை.

சரி. தமிழகத்துக்குச் சொந்தமான பெங்களூரு எப்படி கன்னடத்திற்குத் தாரை வார்க்கப் பட்டது. என்னென்ன ஏமாற்று வேலைகள் நடந்தன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

பெங்களூரு (Bangaloore) பிரச்சினை ஓசூரில் ஆரம்பிக்கிறது. ஓசூர் என்பது இப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பகுதி. வடக்கே தமிழக - கன்னட எல்லையில், பெங்களூருக்கு மிக அருகில் இருக்கிறது. இந்த ஓசூரில் 1950-களில் தெலுங்கு பேசுவோர் 45 சதவிகிதம் இருந்தனர். அடுத்து, கன்னடம் பேசுவோர் 40 சதவிகிதம் இருந்தனர். தமிழ்மொழி பேசுபவர்கள் 10 சதவிகிதம் மட்டுமே இருந்தனர். எஞ்சியவர்கள் வடநாட்டுக்காரர்கள். சரிங்களா. நன்றாகக் கவனியுங்கள்.

ஓசூர் வேண்டாம் பெங்களூரு வேண்டும்

ஓசூரில் தெலுங்கு பேசும் மக்களே அதிகமாக இருந்தனர். அந்தத் தெலுங்கு பேசும் மக்கள் பல நூறு ஆண்டுகளாக ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லாமல் இருந்தனர். மறுபடியும் சொல்கிறேன். பல நூறு ஆண்டுகள். இருந்தாலும் மொழி வாரியாக நிலப் பகுதிகள் பிரிக்கப்படும் போது ஓசூர் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி ஆந்திரா கையெடுத்துக் கும்பிட்டது.




இதில் ஒரு சூசகமான ரகசியம் என்ன தெரியுமா. ஓசூர் என்பது ஒரு வறண்ட பூமி. நிறைய பொட்டல் காடுகள். மொழுக்கையான குன்றுகள். வழுக்கலான மலைகள். மொட்டையான தாவரங்கள். இயற்கையான முறையில் பச்சைகள் வளர்வது ரொம்பவும் கடினம். மாட்டுச் சந்தையில் பொறுக்கி எடுத்த புண்ணாக்கு மாதிரி.

அதனால் அங்கே விவசாயமும் குறைவு. விளைச்சலும் குறைவு. இதுதான் வெளியே சொல்லப்படாத காரணம். வெளியே சொல்லப்படாத ரகசியம். ஓசூர் ரகசியம். அதுதான் உண்மையிலும் உண்மை. ஒரு சின்னச் செருகல். இந்த ஓசூருக்கு மூன்று முறை போய் இருக்கிறேன். கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்குப் போகிற வழியில் இருக்கிறது.

2006ஆம் ஆண்டு. ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்திராலயா இராகவேந்திரா ஆலயத்திற்குப் போய் இருந்தேன். திரும்பி இரவு பத்து மணிக்கு ஓசூர் இரயில் நிலையத்தில் இறங்கினேன். அப்போது ஒரு பெரிய ஆச்சரியம். நம்புவீர்களோ இல்லையோ ஓசூரில் பனி கொட்டியது. இரவு நேரத்தில் ஓசூர் மிகவும் குளிராக இருக்கும் என்று பின்னர் கேள்வி பட்டேன். அப்புறம் இரவோடு இரவாக ஒரு டாக்சி பிடித்து விடியல் காலையில் கிருஷ்ணகிரி வந்து சேர்ந்தேன். சரி. நம்ப கதைக்கு வருவோம்.

ஆந்திராவோடு நிலத் தொடர்பு இல்லை என்பதால் ஓசூர் எங்களுக்கு வேண்டாம் என்று ஆந்திரா மறுத்து விட்டது. சொல்லி இருக்கிறேன். அடுத்து எந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அப்படிப் பார்த்தால் கன்னடர்கள் வருகிறார்கள். 40 விழுக்காட்டு மக்கள் கன்னடர்கள். ஆக அடுத்த நிலையில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால் அதைக் கர்நாடகா மாநிலத்துடன் தானே இணைத்து இருக்க வேண்டும். அதுதானே நியாயமும்கூட. 




கர்நாடகாவும் வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடித்தது. தமிழகத்திற்கு மனமுவந்து கொடுக்கிறோம் என்று சொல்லி ஓசூரை விட்டுக் கொடுத்தது. ஆனால் கன்னடம் அங்கேதான் தன் சாணக்கியச் சதுரங்கக் காய்களை நல்லபடியாக நகர்த்தி இருக்கிறது. அப்போது பெங்களூரு நிலப்பகுதி தமிழகத்திற்குச் சொந்தமாக இருந்தது. மறுபடியும் சொல்கிறேன். பெங்களூரு தமிழகத்திற்குச் சொந்தம். தொடர்ந்து படியுங்கள்.

பெங்களூரு கர்நாடகாவிற்குப் போன கதை

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பெங்களூரு விவகாரம் தலைதூக்கியது. அதாவது பெங்களூருவை யாருக்கு கொடுப்பது என்கிற விவகாரம். அப்போது தான் கன்னடம் தன் துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டது.

கன்னடம் என்ன சொன்னது தெரியுமா. நாங்கள் ஓசூரைப் கொடுத்து விட்டோம். ஓசூரில் கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெருந் தன்மையுடன் ஓசூரைத் தமிழகத்துக்குக் கொடுத்து இருக்கிறோம். அந்த மாதிரி… அதே மாதிரி பெங்களூருவில் அதிகமான தமிழர்கள் இருந்தாலும் பெங்களூருவைத் தமிழகம் எங்களுக்குத் தர வேண்டும் என்றது. நல்ல ஒரு கொடுக்குப் பிடி.




மறுபடியும் சொல்கிறேன். பெங்களூரில் கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்களே அதிகம். கன்னட மக்கள் அதிகம் உள்ள ஓசூரை நாங்கள் கொடுக்கும் போது தமிழர்கள் அதிகம் உள்ள பெங்களூரை ஏன் எங்களுக்குக் கொடுக்கக் கூடாது. பிடி எங்கே விழுந்தது பார்த்தீர்களா.

உண்மையிலேயே சொன்னால் பெங்களூரு நிலப்பகுதி தமிழகத்திற்குச் சொந்தமானது. வேறுவழி இல்லாமல் பெங்களூருவைத் தமிழகம் கன்னடத்திற்குத் தானம் செய்தது. பெண்பிள்ளையைக் கட்டியவனோடு அனுப்பி வைக்கும் போகும் போது அப்பா அம்மா அழுவது இல்லையா. அந்த மாதிரிதான் தமிழர்கள் அழுது கொண்டே பெங்களூருவை வழி அனுப்பி வைத்தார்கள். இப்படித்தான் பெங்களூரும் சீரும் சிறப்புமாய்த் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்குத் தாரை வார்க்கப் பட்டது.

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டன

தமிழகம் அதற்குச் சொந்தமான பல நிலப் பகுதிகளை இழந்ததற்கு முக்கியக் காரணம் வேறு யாரும் இல்லை. அப்போது தமிழகத்தில் இருந்த வாய்ச்சவடால் அரசியல்வாதிகள் தான். அவர்களிடம் மண் சார்ந்த உணர்வு கொஞ்சம்கூட இல்லாமல் போனதுதான் வேதனையிலும் வேதனை.

இப்போது அழுது புலம்பி என்ன பயன். கொஞ்சம் கெட்டிக்காரத் தனமாக இருந்து இருந்தால் இப்போது தலைவிரித்தாடும் காவிரிப் பிரச்சினையும் வந்து இருக்காது. முல்லைப் பெரியாறு பிரச்சினையும் வந்து இருக்காது. சொல்லும் போது மனசிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

அதன் பின்னர் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப் பட்டன. அவை ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப் பட்டன. இதனால் தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இழந்தது. தமிழ்நாட்டில் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கிய 9 வட்டங்களும் ஆந்திராவுடன் இணைக்கப் பட்டன.




தெலுங்கு பேசும் மக்களுக்காக மட்டுமே ஆந்திரா உருவாக்கப் பட்டது. ஆனால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆந்திராவுடன் இணைக்கப் பட்டன என்பது வருத்தமான செய்தி. இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள தமிழர்கள் போராட்டம் செய்தனர். ஆர்ப்பாடங்களில் இறங்கினர்.

அதன் விளைவாக 1961-ஆம் ஆண்டில் திருத்தணி வட்டமும், பள்ளிப்பட்டு பகுதியும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப் பட்டன. மீதமுள்ள 8 வட்டங்களும் இன்று வரை ஆந்திராவில் ஓர் அங்கமாகவே இருந்து வருகின்றன.

ஆந்திர மாநிலம் பிரிக்கப் படுவதற்கு முன்

ஆந்திராவில் இப்போது தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே கல்வி வாய்ப்புகள். வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை. இருந்தாலும் இந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தமிழர்கள். அடுத்து இன்னும் ஒரு வேதனையான செய்தி. ஆந்திர சட்டச் சபைக்குத் தமிழர்கள் போட்டியிட முடியாது. அதே போல நடுவண் மக்களவைக்கும் போட்டியிட முடியாது.

ஆந்திர மாநிலம் பிரிக்கப் படுவதற்கு முன்பு வரை இந்தப் பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளாகத் தமிழர்களே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இப்போது தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைகளை இழந்து விட்டனர். இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டதால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் என்ன என்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும். இது ஓர் இந்திய வரலாற்றுத் தகவல். 




அதை இங்கே மலேசியாவில் ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. ஏன் என்றால் இங்கே தமிழர், தெலுங்கர், மலையாளிகள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். அந்தக் குடும்பத்தின் கூரைகளைப் பிய்த்துப் பார்ப்பது என்பது ரொம்பவும் தவறுங்க.

தமிழக நிலப்பகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள ம.பொ.சி, மார்சல் நேசமணி போன்ற தலைவர்கள் அரும்பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். பற்பலப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களின் அந்த முயற்சியினால் தான் சென்னை, திருத்தணி, செங்கோட்டை, கன்னியாகுமரி போன்ற பகுதிகள் மீட்கப்பட்டன. இல்லை என்றால் அவையும் அப்படியே பறந்து போய் இருக்கும். கதையும் வேறு மாதிரியாகத் தெரித்துப் போய் இருக்கும்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோ மீட்டர்கள். அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதியின் அளவு ஏறக்குறைய 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவை மட்டும் இன்றைக்கு இருந்து இருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக மாறி இருக்கும். மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாகவும் மாறி இருக்கும்.

தமிழகம் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை இழந்தது. அதற்கு காரணமாக இருந்தவை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தான். நான் இந்தக் கட்சி, நீ அந்தக் கட்சி என்று பேதம் பார்க்காமல் கைகோர்த்து அந்த இழப்புகளுக்குத் துணை போனார்கள். இது தமிழக வரலாறு சொல்லும் கக்கல் கழிசலான உண்மைகள்.

விடுதலைப் போராட்ட தியாகி சங்கர்ராவ் தேவ்

ஒரு சின்ன மீள்பார்வை. இந்தியா சுதந்திரம் பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று மூலைக்கு மூலை ஆர்ப்பாட்டக் குரல்கள். அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. சுதந்திரப் போராட்டவாதிகள் தான்.

என்ன யோசிக்கிறீர்கள். அதுதான் உண்மையுங்கூட. குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள் தான் முழுமூச்சாகக் களம் இறங்கினார்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்குத் தனியாக மராட்டிய மாநிலம் வேண்டும் என்று போராட்டம் தொடங்கியது. ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பு உருவாக்கப் பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி சங்கர்ராவ் தேவ் தலைமை தாங்கினார். அடுத்து குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பு வந்தது. அதன் மூலம் அதன் தலைவர் இந்துலால் யக்னிக் போராட்டங்களைத் தொடங்கினார்.

அதன் பிறகு எல்லாவற்றையும்விட பெரிய அளவில் தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அப்படி ஒரு போராட்டம் மட்டும் தலைகாட்டவே இல்லை. அப்போது தமிழகத்தில் இருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வுகள் தான் முக்கியக் காரணங்கள்.

வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த போது சென்னை ராஜதானி எனும் பெயரில் சென்னைப் பெருநிலம் பெருமையாக விளங்கியது. அந்தக் கட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களும் சென்னை நிர்வாகத்தின் கீழ் தான் இருந்தன. அதனால் சென்னை மாநிலமும் சென்னையைச் சார்ந்த தமிழ் மண்ணும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பேதம் பார்க்கவில்லை.

தமிழகத்திற்குச் சேர வேண்டிய திருவனந்தபுரம் எப்படி கேரளாவுக்குப் போய்ச் சேர்ந்தது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். (தொடரும்)